Arts
10 நிமிட வாசிப்பு

மாற்றம் ஒன்றே மாறாதது

September 11, 2024 | சியாமளா சோமசுந்தரம்

காலம் என்னும் சக்கரம் சுழன்றபடியே இருக்கின்றது. இம்மாற்றத்திற்கேற்ப இயற்கையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இது யாவரும் அறிந்த ஒன்றே.

இம்மாற்றம் மனித வாழ்வையும் விட்டுவைக்கவில்லை. குடிசைகள்கோபுரங்களாகி விட்டன. வீட்டின் வாயிற்படி தாண்டி வெளியே வராமலிருந்த பெண்கள் பல துறைகளிலும் கல்வி கற்று பல சாதனைகளையும் படைத்துள்ளனர். இது பாராட்டப்படக் கூடிய விஷயமாகும்.

ஆணுக்குப் பெண் அடிமையாக வாழ்ந்த காலம் போய்விட்டது. இன்று ஆணும் பெண் ணும் சரிசமமாக மதிக்கப்படுகிறார்கள். இந்நிலை மாறியதற்குப் பாரதியாரையே நாம் போற்ற வேண்டும்.பெண் விடுதலை பற்றிப் பல பாடல்களைப் பாடிப் பெண் களின் அறிவுக் கண்களைத் திறந்து வைத்தவர் அவரே. வீட்டில் தாயார் படித்தவராக இருந்தால் தன் பிள்ளைகளையும் எப்பாடுபட்டாவது கல்வியில் ஊக் கம் கொள்ள வைப்பாள். வீடு சிறப்புற்றால் நாடும் சிறப்புறும். இம் மாற்றம் பெண்களுக்கெல்லாம் கிடைத்த மாபெரும் வரப்பிரசாதம்.

காலமாற்றத்தை ஏற்கவும் முடியாமல், மறுக்கவும் இயலாமல் திண்டாடித் தவிப்பவர்கள் மூத்தோரும் இளையோரும் என்பது என் கருத்து.

எமது தாய் நாட்டில் வாழ்ந்த காலத்தில் பெற் றோர் தமது பிள்ளைகளுக்காக பல தியாகங்கள் செய்து தமது அபிலாசைகளை மறந்து, மறைத்து அவர்களின் கல்வி எதிர்காலம் ஒன்றே தமது இலட்சியங்களாக வாழ்ந்தனர். தமது பிள்ளைகள் மேலைத் தேசம் சென்று கல்வி பயிலவும் ஒத்துழைப்பு வழங்கினார். பிள்ளைகளும் தம் பெற்றோரை விட்டுப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தம் வாழ்வை ஆரம்பித்தனர்.

தாம் எடுத்த கடமை இனிதாக நிறைவேறி விட்ட திருப்தியில் பெற்றோரும் தம் மிடம் இருப்பதைக் கொண்டு தம் வாழ்வை வாழ முனைந்தனர். மாற்றம் அவர்களை மட்டும் விடுமா என்ன? முதுமை, தள்ளாமை, நோய் என்பன அவர்களையும் விட்டுவிடவில்லை. பிள்ளைகளின் பிரிவு வாட்டியது.

கால மாற்றத்தை நன்கு உணர்ந்துகொண்ட சில பிள்ளைகள் தம் பெற்றோரையும் தம்முடன் அழைத்துக் கொண்டனர். அவர்கள் வசதியாக வாழவும் வழி அமைத்துக் கொடுத்தனர். இப்படி யான பிள்ளைகளைப் பெற பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள். மூத்தோரும் தமது பேரப் பிள்ளைகளுடன் மகிழ்வாக வாழ்ந்துகொண்டு தம் பிள்ளைகளுக்கும் தம்மாலான உதவிகளைச் செய்து நலமாக வாழ்கின்றனர்.

வேறு சில பிள்ளைகள் கால மாற்றத்தை உணர்ந்தும் பெற்றோரின் உடல்நிலை புரிந்தும், பணத்தை மட்டுமே அனுப்புகின்றனர். பணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு முதியோரும் என்னதான் செய்வது. அன்பான வார்த்தை, அரவணைப்புக்காக ஏங்குகின்றனர். தள்ளாமை வேறு. காலப்போக்கில் தாய் தந்தையர் முதியோர் இல்லங்களில் அடைக் கலம் புகுகின்றனர். அங்கு முதியோர் வசதியாக வாழப் பல அமைப்புகள் வழி அமைத்துக் கொடுக்கின்றன. பசிக்கு உணவு கிடைக்கின்றது. பொழுதுபோக்கு அம்சங்கள் உண் டு. மனதுக்கு? அது அலைபாய்கிறது. இங்குதான் இவர்கள் மாற்றத்தை உணர வேண்டும். “நூம் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு உழைத்தோம். அதில் வெற்றியும் பெற்று விட்டோம். அதன் பலன் எம் முதுமைக்காலத்தில் யாரோ எமக்கு உதவுகின்றனர். இதுவே இறைவன் செயல்” என எண்ணி மனதை இலேசாக்கி மகிழ்வாக வாழப் பழக வேண்டும்.

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ எனும் பழமொழி எமக்கும் பொருந்தும் அல்லவா? நாம் ஒன்று இரண்டு பிள்ளைகளை வளர்த்தோம். இன்று பல பிள்ளைகள் எமக் கு. அவர்கள் ஆதரவில் நாம் வாழ்கிறோம் என மன ஆறுதல் அடைவோம். இறைவன் பிள் ளைகள் நாம் என தைரியம் கொள்வோம். நானும் ஒரு முதியவள். கால மாற்றத்தை உணர்ந்து இன்றுவரை என்னாலியன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்துகொண்டு மகிழ்வாக வாழ்கிறேன்.

அடுத்து சில இளையோரும் காலமாற்றத்துக்கு ஏற்ப வாழ முடியாது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பிள் ளைகள் பெற்றோரின் உதவியால் சிறப்பாக கல்வி கற்று பட்டதாரிகள் ஆகின்றனர். தமக் குப் பிடித்தமான தொழிலிலும் ஈடுபட்டு உற்சாகமாக வாழ்கின்றனர். பெற்றோரும் தம் பிள் ளைகள் திருமண வயதை அடைந்ததால் உரிய வாழ்க்கைத் துணையைத் தேட ஆரம்பிக்கின்றனர். இளையோர் சிலர் பெற்றோரின் மனம் கோணாமல் திருமணம் புரிந்து இனிதாக வாழ்கிறார்கள். வேறு சிலர் தம் மனதுக்கு பிடித்தவரை தாமே தெரிவுசெய்து பெற்றோரின் சம்மதம் கேட்கும்போதுதான் பிரச்சனையே ஆரம்பிக்கும். “குலம் என்ன? மதம் என்ன? மொழி என்ன ? நாடு என்ன? எனப் பல கேள்விகள். எல்லாம் சமரசமாக முடிந்துவிட்டால் மகிழ்ச்சி. பிறகென்ன திருமணம்தான். இல்லையேல்; பெற் றோர் சம்மதம் கிடைக்காவிடில் துணிச்சலுள்ள பிள்ளைகள் நண்பர்களின் உதவியுடன் தம் திருமணத்தை முடித்து வாழ ஆரம்பிக்கின்றனர். மாற்றத்தை அறிந்த பிள்ளைகள். வாழ்க வளமுடன்.

சில பிள்ளைகள் பரிதாபத்துக்குரியவர்கள். என்னதான் உயர் பதவியில் இருந்தாலும் பெற்றோருக்கும் காதலிடத்தவருக்கும் இடையே அகப்பட்டு யாரையும் பிரிய மனமின்றி மன உளைச்சலுக்கு ஆளாகி தம்மைத் தாமே அழித்துக்கொள்கின்றனர். இதற்கு காரணம் யார்? காலமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள்தானே? நாம் பிறந்தது வாழ்வதற்கே. நமக்காக வாழ முடியாவிட்டாலும் பிறருக்காக வாழ்வோம். காலமாற்றத்திற்கேற்றபடி வாழ்ந்து காட்டுவோம்.

சியாமளா சோமசுந்தரம்


20 பார்வைகள்

About the Author

சியாமளா சோமசுந்தரம்

உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள்

Your email address will not be published. Required fields are marked *

எழுத்தாளர்கள்
தலைப்புக்கள்